சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலங்கையில் மசூதி மீது தாக்குதல்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் மசூதி மீது புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 6:35 am

இலங்கைத் தலைநகர் கொழும்பில் மசூதி மீது புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் உள்ள தீனுல் இஸ்லாம் மசூதியில் சனிக்கிழமை முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கும்பலாக வந்து, மசூதி மீது கற்களை வீசினர். பின்னர் அவர்கள் மசூதிக்குள் புகுந்து, வன்முறையில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதலில் 12 முஸ்லிம்கள் காயமடைந்ததாக மசூதியின் அறங்காவலர் ஏ.ஹமீது தெரிவித்தார். காயமடைந்தவர்கள் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, மசூதி மீதான தாக்குதல் குறித்து தகவல் அறிந்த முஸ்லிம் இளைஞர்கள் அங்கு திரண்டனர். அவர்களுக்கும் தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதைத் தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திகா சிரிவர்தனா தெரிவித்தார்.

மசூதி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸார் சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை தளர்த்தப்பட்டது. எனினும், மேலும் வன்முறை நடக்காமல் தடுப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

எனினும், நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினரை அங்கு குவித்துள்ளோம். மசூதி மீதான தாக்குதல் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

அப்பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பி.க்கள் அந்த மசூதியைப் பார்வையிட்டனர்.

அதன் பின், அப்பகுதியில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறைத் தலைவர் என்.கே.இலங்காகூன் கூறுகையில், ""நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தவறாக வழிநடத்தக் கூடிய தகவல்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்துகிறோம்'' என்றார்.

முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமத தேசியக் குழுக்கள் கடுமையாக பிரசாரம் செய்து வரும் சூழ்நிலையில், மசூதி மீது இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கவலை தெரிவித்துள்ளது.