சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மீறப்படவில்லை

இந்தியா-இலங்கை இடையிலான 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீறப்படுவதாக வெளியான தகவலை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச மறுத்துள்ளார்.

Updated On :22 ஜூன் 2013, 4:49 am

இந்தியா-இலங்கை இடையிலான 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீறப்படுவதாக வெளியான தகவலை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச மறுத்துள்ளார்.

ராஜபட்ச செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ""இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறவில்லை. இலங்கை அரசியல் சட்டத்தின் 13ஏ பிரிவில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை'' என்றார்.

13ஏ பிரிவில் திருத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஜூலை மாதம் இலங்கை செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ராஜபட்ச, சிவசங்கர் மேனன் பயணம் வழக்கமானதுதான் என்றும், அவர் இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிறார் என்றும் தெரிவித்தார்.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, 1987ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மாகாணங்கள் மீதான இலங்கை அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் 13ஏ பிரிவும், மாகாண கவுன்சிலும் உருவாக்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, விடுதலைப்புலிகளின் புகலிடமாக விளங்கிய வடக்கு மாகாண கவுன்சிலுக்கு முதன் முறையாக செப்டம்பரில் தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

அதற்கு முன்பாக, மாகாண கவுன்சில் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், 13ஏ பிரிவில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சிங்கள அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பான அவசர மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சமீபத்தில் தில்லிக்கு வந்து பிரதமரிடம் இதுதொடர்பாக புகார் செய்தனர். இதையடுத்து, இலங்கை தமிழர்களை இந்தியா கைவிடாது என்று அவர்களிடம் மன்மோகன் சிங் உறுதி அளித்திருந்தார்.