சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அதிபர் பதவிக்காலம் முடிந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: ஜர்தாரி

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது அதிபர் பதவிக்காலம் முடிந்ததும், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி

Updated On :22 மே 2013, 8:13 am

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது அதிபர் பதவிக்காலம் முடிந்ததும், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தச் சூழ்நிலையில்  பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட்ட தன் கட்சி வேட்பாளர்களை அவர், லாகூரில் உள்ள தனது வீட்டில் சந்தித்தார். அப்போது அவர்களிடம் ஜர்தாரி பேசியது:

நமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதை சில சர்வதேச சக்திகள் விரும்பவில்லை. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நமது அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களால் அவை அதிருப்தி அடைந்திருந்தன. கட்சியின் தோல்விக்கு தேசிய மற்றும் சர்வதேச சக்திகளே காரணம். நமது கட்சியின் வெற்றியைத் தட்டிப் பறித்து விட்டார்கள். ஆனால், மத்தியில் எதிர்க்கட்சி என்ற முறையில் கட்சி முக்கியப் பங்காற்றும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எனது அதிபர் பதவிக்காலம் முடிந்ததும், தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்றார் ஜர்தாரி.

பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசு, ஈரானுடன் இணைந்து குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தையும், சீனாவுடன் இணைந்து குவாடர் துறைமுகத் திட்டத்தையும் நிறைவேற்ற முன்வந்தது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். தோல்வியடைந்த அக்கட்சியின் வேட்பாளர்கள் பலரும், முன்னாள் பிரதமர்கள் பர்வேஷ் அஷ்ரப், கிலானி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஆகியோரை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். இந்த மூன்று மூத்த தலைவர்களும் கட்சிக்கு மிகப்பெரிய தீங்கிழைத்து விட்டதாக அவர்கள் குறை கூறுகின்றனர்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் ஒருவர் கூறுகையில், ""கிலானியின் மோசமான நிர்வாகமும், மின் பற்றாக்குறை பிரச்னையை அஷ்ரப் சரிவரக் கையாளாததுமே எங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் தோல்வியடையக் காரணம்'' என்றார்.