சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழ்நாடு விளையாட்டு பல்கலை.யில் ரூ.2.20 கோடியில் விளையாட்டு அறிவியல் மையம்

தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.2.20 கோடியில் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:11 am

தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.2.20 கோடியில் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கும் உரிய முனைப்பான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், பத்து விளையாட்டுகளில் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடையே இந்தப் போட்டிகளின் தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் போட்டிகளை மேலும் வலுப்படுத்தி, போட்டிகளின் தரம் அதிகரிக்கும் வகையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் போன்று தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கோப்பைக்கான போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளான கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, கபடி, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகு பந்து ஆகியவை மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் மற்றும் மாநில அளவிலும் நடத்தப்படும்.

ஒரு மாவட்டத்துக்கு 204 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என ஒரு மண்டலத்துக்கு ஆயிரத்து 632 பேர் இந்த விளையாட்டில் பங்கேற்பார்கள். மொத்தம் 204 பேர் தங்கப் பதக்கமும், 204 பேர் வெள்ளிப் பதக்கமும், 204 பேர் வெண்கலப் பதக்கமும் வென்று அதற்குரிய பரிசுத் தொகையை பெறுவார்கள்.

விளையாட்டு அறிவியல் மையம்: விளையாட்டு வீரர்ளுக்கு விஞ்ஞான ரீதியாக பயிற்சி அளிப்பதற்கு வசதியாக நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு அறிவியல் மையத்தை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.2.20 கோடி செலவில் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை புதிய கட்டடம் கட்டவும், புதிய கருவிகள் வாங்கவும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்கவும் செலவிடப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் ஜிம்

தலைமைச் செயலகத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தலைமைச் செயலகத்தில் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுகிறார்கள்.

தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை தலைமைச் செயலகத்தில் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ரூ.50 லட்சம் செலவில் 2 ஆயிரம் சதுரஅடியில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் 20 வகையான நவீன கருவிகளுடன் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.