சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஈரான் சிறையில் வாடும் திருவாடானை மீனவ குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி

கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள திருப்பாலைக்குடி உள்பட 4 கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 8:44 am

கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள திருப்பாலைக்குடி உள்பட 4 கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினர்.

திருவாடானை தாலுகா, திருப்பாலைக்குடியைச் சேர்ந்த காளிகண்ணதாசன், மாயகிருஷ்ணன், காளியப்பன், உமாசெல்வம், முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த முத்து தருமையா, மாயாண்டி, காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ், மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த ராஜகருப்பையா, சாய்பு ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் சவுதி அரேபியாவிற்கு சென்றனர்.

இவர்கள் சவுதி அரேபியாவில் மீன்பிடிக்கும்போது கடல் எல்லையைத் தாண்டியதாக ஈரான் அரசு சிறை பிடித்துள்ளது. இவர்களை மீட்க உதவுமாறு அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு ஆட்சியர் கொண்டு சென்றார்.

இந் நிலையில், வறுமையில் வாடும் மீனவக் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இதன்படி மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால், கைத்தறித் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் ஆகியோர் வியாழக்கிழமை திருப்பாலைக்குடி சென்று காளிகண்ணதாசனின் தந்தை கருப்பையா, மாயகிருஷ்ணனின் மனைவி சுதாமேரி, காளியப்பனின் மனைவி தேவகி, உமாசெல்வத்தின் தாய் முத்து ஆகியோரிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

பின் மோர்பண்ணை கிராமத்துக்குச் சென்று ராஜகருப்பையாவின் தாய் ரெத்தினம், சாய்புவின் மனைவி தேவகி ஆகியோரிடமும், முள்ளிமுனை கிராமத்துக்குச் சென்று முத்து தருமையாவின் தாயாரிடமும், மாயாண்டியின் தாய் கனகவள்ளியிடமும், காரங்காடு சென்று ஜெயராஜ் மனைவி சூசைமேரி ஆகியோரிடமும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர்.