சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாளையாறு சோதனைச் சாவடியைக் கண்டித்து 2-ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்

வாளையாறு சோதனைச் சாவடியில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்து இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, கேரள மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய உணவு, தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.

Updated On :22 ஜூலை 2013, 4:44 am

வாளையாறு சோதனைச் சாவடியில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்து இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, கேரள மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய உணவு, தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வாளையாறு சோதனைச் சாவடி வழியாக இயக்கப்படும் லாரிகள், அனுமதி வேண்டி சுமார் 10 மணி நேரம் முதல் 32 மணி நேரம் வரைக் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னையைத் தீர்க்குமாறு, கேரள மாநில அரசிடம் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால், பொருள்களைச் சரியான நேரத்தில் கொண்டுசெல்ல முடிவதில்லை. இதன் காரணமாக, பொருளாதார இழப்பு ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து, சனிக்கிழமை காலை (ஜூலை 20) முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கேரளத்திற்குச் செல்ல வேண்டிய காய்கறி, பழங்கள், பால், முட்டை, இறைச்சி, டீத்தூள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் தேக்கமைடைந்துள்ளன.

இதுகுறித்து தென் மாநில லாரி உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வாளையாறு சோதனைச் சாவடியில் நிலவும் தாமதத்தைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் ரூ. 300 கோடி மதிப்பிலான உணவு, தொழில் உற்பத்திப் பொருள்கள் தேக்கமைடந்துள்ளன.

ஆனால், கேரள அரசு இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. எங்களது பிரச்னை தீர்க்கப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்றார்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு வழக்கம் போல லாரிகள் இயக்கப்படுகின்றன. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்த லாரிகளும் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக, கேரள மாநில லாரி உரிமையாளர் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.