சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அறிவுநிதி மீது வழக்கு ?

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மகன் அறிவுநிதி மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை பெருநகர காவல்துறை தயாராகி வருகிறது.

Updated On :2 மே 2013, 1:04 pm

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மகன் அறிவுநிதி மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை பெருநகர காவல்துறை தயாராகி வருகிறது. மேலும், மு.க. முத்துவை கருணாநிதியின் குடும்பத்தினர் வற்புறுத்தி கையெழுத்துப் போட வைத்தது உண்மைதானா என்பதையும் காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக போலீஸார் மு.க.முத்துவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் தினமும் நடத்தப்படும் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த திங்கள்கிழமை மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரியும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில், தங்களது மகன் அறிவுநிதி, தாங்கள் குடியிருந்து வந்த கோபாலபுரம் வீட்டை வஞ்சகமாகப் பேசி அபகரித்துக் கொண்டதாகவும், அதனால், தாங்கள் கஷ்டப்படுவதாகவும் புகார் மனு கொடுத்தார். மேலும்,அந்த மனுவில் அறிவுநிதியிடமிருந்து அச்சுறுத்தலும், மிரட்டலும் இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் சிவகாமசுந்தரி குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்ததாக பத்திரிக்கையாளரிடம் சிவகாமசுந்தரி ஒரு மனுவை கொடுத்தார். ஆனால் மு.க.முத்து தானே எழுதி கொடுத்தனுப்பிய மற்றொரு மனுவை பத்திரிகையாளர்களிடமிருந்து சிவகாமசுந்தரி மறைத்துவிட்டதாகவும், அதை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரு மனுக்களையும் பெற்ற கூடுதல் காவல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவம், அதை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டார். இதற்கிடையே சில மணிநேரத்தில் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு மு.க.முத்து சார்பில் ஒரு மறுப்பு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் கொடுத்த மனுவிலுள்ள செய்தியைப் பிரசுரிக்க வேண்டாம் என மு.க. முத்து குறிப்பிடப்பட்டிருந்தார். ஆனால் மு.க.முத்து சார்பில் கொடுக்கப்பட்டிருந்த மனுவைப் பற்றி அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விசாரணையை தொடங்கினர்: மனு கொடுத்த சில மணி நேரத்திலேயே மு.க.முத்துவின் மறுப்பு அறிக்கை வந்தது காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் சிவகாமசுந்தரி கொடுத்த மனுவை எவ்வித விசாரணையும் செய்யாமல், முத்து சார்பில் கொடுத்த மனுவை மட்டுமே ஏற்றுக்கொண்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

இது தொடர்பாக மு.க.முத்து மற்றும் அவர் மனைவி சிவகாமசுந்தரி ஆகிய இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனர். முத்துவிடம் நடத்திய விசாரணையில், தனது மகன் அறிவுநிதி தன்னை ஏமாற்றி வீட்டை அபகரித்துக் கொண்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தீர்மானமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், மு.க. முத்துவால் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட மறுப்பு அறிக்கை, அவரது குடும்பத்தினரால் வலுக்கட்டாயமாக அவரை கையெழுத்துப் போடவைத்து அனுப்பப்பட்டது என்பதை அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரால் குடும்பத்தினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அவரது தந்தையும், திமுக தலைவருமான மு. கருணாநிதியையா என்பதை தெளிவுபடுத்த போலீஸார் மறுத்துவிட்டனர்.

அறிவுநிதி மீது மு.க.முத்து கொடுத்த புகாரின் அடிப்படையின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை போலீஸார் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு சட்ட வல்லுநர்களின் கருத்துகளை பெருநகர காவல்துறை கேட்டுள்ளதாம். சட்ட வல்லுநர்களின் கருத்தை அறிந்த பின்னர், அறிவுநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என பெருநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மு.க.முத்துவிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியது யார் எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன்மீதும் வழக்கு பதிவு செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

இதற்கிடையே மு.க.முத்துவை, கருணாநிதி குடும்பத்தினர் சமாதானப்படுத்தி அவர் சார்பில் வழங்கப்பட்ட புகார் மனுவை திரும்பப் பெற வைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.