சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் முகாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்று கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் 120 பேரும் நாகையிலிருந்து அவரவர் முகாமுக்கு புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டனர்.

Updated On :12 ஏப்ரல் 2013, 8:34 am

ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்று கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் 120 பேரும் நாகையிலிருந்து அவரவர் முகாமுக்கு புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டனர்.

சென்னை, வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அகதிகள் 120 பேர், நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து கடல் வழியாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றனர்.

இவர்கள், பயணம் செய்த படகு கடந்த சனிக்கிழமை அதிகாலை இயந்திரக் கோளாறால் பாதிக்கப்பட்டது. இந்தியக் கப்பல் படை மற்றும் தமிழக கடலோரக் காவல் படையினர் விரைந்து செயல்பட்டு, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை காரைக்கால் துறைமுகப் பகுதியில் கரையேற்றினர். கரையேற்றப்பட்ட அகதிகள் 120 பேரும் நாகையில் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இதில், குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தவிர ஆண்கள் 75 பேர் மீது நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நாகை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டு, ஏப்.10-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

மீண்டும் அதே நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட அகதிகள் 75 பேரையும் சொந்த ஜாமினில் விடுவிப்பதாக குற்றவியல் நடுவர் சரஸ்வதி உத்தரவிட்டார்.

அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி பெறப்பட்ட பின்னர், அவரவர் முகாமுக்குத் திரும்பிச் செல்ல போலீஸார் அறிவுறுத்தினர். முகாம்களிலிருந்து வந்திருந்த உறவினர்களுடன் 75 பேரும் முகாமுக்குப் புறப்பட்டனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள், தொடர்புடைய முகாம்களிலிருந்து வந்திருந்த காவல் துறையினரின் ஒருங்கிணைப்பில் புதன்கிழமை இரவு அவரவர் முகாமுக்கு புறப்பட்டுச் சென்றனர்.