சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பேரவைத் தலைவரின் இருக்கை முற்றுகை: திமுக எம்எல்ஏக்கள் 2 பேர் சஸ்பெண்ட்

பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சிவசங்கர் (குன்னம்), ஜெ.அன்பழகன்

Updated On :2 ஏப்ரல் 2013, 8:04 am

பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சிவசங்கர் (குன்னம்), ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) ஆகியோர் பேரவையில் இருந்து திங்கள்கிழமை (ஏப்ரல் 1) முதல் இரண்டு நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் பேரவை நடவடிக்கைகளில் அவர்கள் செவ்வாய்க்கிழமை கலந்து கொள்ள முடியாது.

இதேபோன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டனர்.

ஜி.பி.எஸ். முறை வசதி கொண்ட மின்னணு பயணச் சீட்டுகளை வழங்கும் இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி குறித்து விவாதிக்க சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கொடுத்திருந்தன.

இந்தப் பிரச்னை குறித்து மு.க.ஸ்டாலின் (திமுக), ஆ.சௌந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), கே. ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் பேசினர். அவர்களின் வாதங்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பதிலளிக்கும்போது பிரச்னை ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதம்:

அமைச்சர் செந்தில்பாலாஜி:

பேரவையில் திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானது. உண்மையற்றது. இப்படியொரு குற்றச்சாட்டை இந்த பேரவையில் கூற உறுப்பினர் மு.க.ஸ்டாலினுக்குத் தகுதி இருக்கிறதா என்று கேட்டால், லட்சத்தில் ஒரு பங்குகூட தகுதியில்லை.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின் வரிசையில் இருந்த திமுக உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், தங்கம் தென்னரசு, கோவி.செழியன், எ.வ.வேலு, எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் முன்வரிசைக்கு வந்து அமைச்சர் தெரிவித்த கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அமைச்சர் பேசி முடிந்ததும், இதுகுறித்து தங்களது விளக்கத்தை அளிக்கும்படி பேரவைத் தலைவர் சமாதானப்படுத்தினார். ஆனால், திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கூச்சல் எழுப்பினர். இதற்கு பதிலடியாக அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால், பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது முதல்வர் ஜெயலலிதா ஒரு கருத்தைத் தெரிவிக்க முற்பட்டார். பேரவையில் நிலவிய கூச்சல் குழப்பத்தால் அந்தக் கருத்தை அவரால் கூற முடியவில்லை. இதனால் இருக்கையில் அமர்ந்தார்.

சஸ்பெண்ட்-வெளியேற்றம்: கூச்சல் எழுப்பிய திமுக உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி பேரவைத் தலைவர் எச்சரித்தார். தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து அதுபோன்ற நடவடிக்கையை எடுக்க நேரிடும் என தொடர்ந்து எச்சரித்தார். ஆனாலும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இந்த கூச்சல்களுக்கு இடையே எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் பேரவைத்தலைவரின் இருக்கை அருகே வந்து குரல் எழுப்பினர். பேரவைத் தலைவரின் மேஜையை சிவசங்கர் மூன்று முறைகளுக்கு மேல் தட்டினார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையில் இருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதின்பின் பேசிய பேரவைத் தலைவர் பி.தனபால், எனது இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிய திமுக உறுப்பினர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.

இதன் தொடர்ச்சியாக அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பேரவை விதிகளை மதிக்காமல் அவைக்கு குந்தகம் விளைவித்து பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோரை இன்றும், நாளையும் (திங்கள் மற்றும் செவ்வாய்) பேரவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.