சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்

தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தன்னை விமர்சித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி

Updated On :12 மார்ச் 2013, 7:15 am

தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தன்னை விமர்சித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் என்னை துரோகி என்றும், கர்நாடக அரசின் வழக்குரைஞர்போல செயல்பட்டதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இதனை தமிழக விவசாயிகளும், அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் ஏற்றுக் கொள்கிறார்களா?

5-2-2007-ல் வெளியான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட அன்றைய முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை என ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், தீர்ப்பு வெளியானதும் அது குறித்து முடிவெடுக்க 15-4-2007-ல் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அதில் பெரும்பான்மையானவர்கள் சொன்னபடி செயல்பட்டோம்.

காவிரிப் பிரச்னையில் எனக்கு என்ன பங்கு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். 17-2-1970-ல் நான் முதல்வராக இருந்தபோதுதான் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதற்காக 8-7-1971-ல் நான் முதல்வராக இருந்தபோதுதான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 6-7-1986-ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். கடிதம் எழுதியதால்தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

1998-ல் பிரதமர் வாஜ்பாய் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தபோது, தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தில்லி சென்றேன். ஒன்பது மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரதமர் வாஜ்பாயே அமர்ந்து ஒப்பந்தம் கண்டார். காவிரி நதி நீர் ஆணையம் அமைந்தது. அதனைத்தான் நான் செய்த துரோகம் என்கிறார் ஜெயலலிதா.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்டதற்காக தஞ்சையில் விவசாயிகளின் சார்பில் 23-8-1998-ல் எனக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இப்போது ஜெயலலிதாவின் பாராட்டு விழாவுக்கு தலைமை வகித்த மன்னை ரங்கநாதன்தான் அந்தக் கூட்டத்துக்கும் தலைமை வகித்தார்.

அந்தக் கூட்டத்தில் ரங்கநாதனும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணுவும் என்னைப் பாராட்டினர். அப்போது காவிரி பாசன விவசாயிகளுக்காக என்றென்றும் உழைப்பேன் என்று பேசினேன். அதுபோல இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.