சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போல்ட் மீண்டும் உலக சாம்பியன்

உலக தடகளப் போட்டியின் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கம் வென்றார். இதன்மூலம் நான்தான் உலகின் அதிவேக மனிதர் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார் போல்ட்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 11:55 am

உலக தடகளப் போட்டியின் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கம் வென்றார். இதன்மூலம் நான்தான் உலகின் அதிவேக மனிதர் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார் போல்ட்.

2009-ல் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட், கடந்த முறை (2011) தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இப்போது முதலிடம் பிடித்து தங்கம் வென்றதன் மூலம் மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ளார்.

14-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள லுஷினிகி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை கடும் மழைக்கிடையே நடைபெற்ற ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற உசேன் போல்ட், ஆரம்பத்தில் நிதானமாக ஓடியபோதும், பந்தய தூரத்தின் பாதி தொலைவைக் கடந்த பின்னரே வேகம் பிடித்தார்.

அதன் பிறகு மின்னல் வேகத்தில் சென்ற போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லினை பின்னுக்குத் தள்ளி, 9.77 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ஜஸ்டின் கேட்லின் (9.85) வெள்ளியும், மற்றொரு ஜமைக்க வீரரான நெஸ்டா கார்ட்டர் (9.99) வெண்கலமும் வென்றனர்.

6-வது தங்கம்: 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் உலக சாதனையை தன்வசம் வைத்திருக்கும் போல்ட், உலக தடகளப் போட்டியில் வென்ற 6-வது தங்கப் பதக்கம் இது. அடுத்ததாக 200 மீ. ஓட்டம், 4ல100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உசேன் போல்ட் பங்கேற்கவுள்ளார். அந்த இரு பிரிவுகளிலும் அவர் தங்கம் வெல்லும் பட்சத்தில் உலக தடகளப் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்கள் (8 பதக்கம்) வென்றவர் என்ற சாதனையை அமெரிக்காவின் கார்ல் லீவிஸýடன் பகிர்ந்து கொள்வார்.

திருனேஷ் ஹாட்ரிக்: மகளிர் 10,000 மீ. ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் திருனேஷ் திபாபா (30:43.35) தங்கமும், கென்யாவின் கிளாடிஸ் செரோனா (30:45.17) வெள்ளியும், எத்தியோப்பியாவின் பீலேனேஷ் (30:46.98) வெண்கலமும் வென்றனர்.

ஏற்கெனவே 2005, 2007-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்றிருந்த திருனேஷ், இப்போது 3-வது முறையாக தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்னீ ரீஸ் ஹாட்ரிக்: மகளிர் நீளம் தாண்டுதலில் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் பிரிட்னீ ரீஸ் 7.01 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று "ஹாட்ரிக்' சாதனை புரிந்துள்ளார். முன்னதாக 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியிலும் இவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதேபிரிவில் நைஜீரியாவின் பிளெஸ்ஸிங் ஓகாக்பரே 6.99 மீ. தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், செர்பியாவின் இவானா ஸ்பேனாவிக் 6.82 மீ. தூரம் தாண்டி வெண்கலமும் வென்றனர்.

ரஷியாவுக்கு 3-வது தங்கம்: ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ரஷியாவின் அலெக்சாண்டர் இவானோவ், 1 மணி நேரம், 20 நிமிடங்கள், 58 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 20 கி.மீ. நடைப் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக தங்கத்தைத் தட்டிச் சென்றது ரஷியா.

லண்டன் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் செங் டிங் (1:21.09) வெள்ளிப் பதக்கத்தையும், ஒலிம்பிக்கில் 5-வது இடத்தைப் பிடித்தவரான ஸ்பெயினின் மிகைல் லோபஸ் (1:21.21) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரான குவாதிமாலாவின் எரிக் பரான்டோ, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்திய வீரர்கள் ஏமாற்றம்: ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான இர்ஃபான், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதேநேரத்தில் மற்ற இரு இந்தியர்களான குருமீத் சிங், சந்தன் சிங் ஆகியோர் முறையே 33 மற்றும் 34-வது இடங்களைப் பிடித்தனர்.

இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இர்ஃபான் விரைவாக முன்னேறினார். இதனால் இவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 15-வது கி.மீ. தூரத்தை நிறைவு செய்வதற்கு முன்பு வரை அவர் 6-வது இடத்தில் இருந்தார். 15 கி.மீ. தூரத்திற்குப் பிறகு விதிகளை மீறியதாகக் கூறி இர்ஃபானை நிறுத்திய போட்டி நடுவர்கள், அவரை தகுதி நீக்கம் செய்தனர். தேசிய சாதனையை தன்வசம் வைத்திருக்கும் இர்ஃபான், லண்டன் ஒலிம்பிக்கில் 10-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.