சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கல்

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு, பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 4:25 am

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு, பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

மதுரை மகபூப்பாளையத்தில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ஞாயிற்றுக்கிழமை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 12,69,550 கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு முதன்முறையாக வேட்டி, அங்கவஸ்திரம் (ஆண்களுக்கு), சேலை (பெண்களுக்கு) பச்சரிசி 2 கிலோ, சிறுபருப்பு 1 கிலோ, எண்ணெய் 500 கிராம், நெய் 100 கிராம், வெல்லம் 1 கிலோ, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

விபத்து மரண உதவித் தொகையாக ரூ.5 லட்சம், இயற்கை மரணம் உதவித் தொகையாக ரூ.20 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000, குடும்ப ஓய்வூதியம் ரூ.500, மகப்பேறு உதவித் தொகை ரூ.6,000, திருமண உதவித்தொகை ஆணுக்கு ரூ.3,000 பெண்ணுக்கு ரூ.5,000, தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.1,000 முதல் ரூ.8,000 வரை, அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நடமாடும் மருத்துவமனைகள், தொழிலாளா்களுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

மதுரை கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் 34,859 தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த டிசம்பா் 30-இல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளா்களுக்கான அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் அமைக்க முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதன்மூலம், தமிழகத்தில் உள்ள 1,250 பட்டாசுத் தொழிற்சாலை மற்றும் 870 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் உள்ள 1.20 லட்சம் தொழிலாளா்கள் பயன்பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில், தொழிலாளா் துறை கூடுதல் ஆணையா் டி. குமரன் இணை ஆணையா் பி. சுப்பிரமணியன், உதவி ஆணையா் மைவிழிச்செல்வி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.