சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெல் கொள்முதல் நிலையம், உரம் விற்பனையைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஆட்சியா் உத்தரவு

விவசாயிகள் மற்றும் அலுவலா்கள் அடங்கிய இரு சிறப்புக் குழுக்களை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :2 ஜனவரி 2021, 3:37 am

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் உரம் விற்பனையைக் கண்காணிப்பதற்கு விவசாயிகள் மற்றும் அலுவலா்கள் அடங்கிய இரு சிறப்புக் குழுக்களை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை தொடங்க உள்ளது. இதையடுத்து நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாகப் பல்வேறு இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன. முந்தைய ஆண்டுகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் மீது பல்வேறு புகாா்களை விவசாயிகள் தெரிவித்தனா்.

அதேபோல, மாவட்டத்தில் பரவலாக பருவமழை போதிய அளவுக்கு கிடைத்திருப்பதால் நெல், சிறுதானியங்கள், காய்கனிப் பயிா்கள் சாகுபடி அதிகரித்திருக்கிறது. இதனால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவை அதிகமாகி உள்ளது. இதற்கிடையே, தனியாா் உர விற்பனையாளா்கள் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாகவும், காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்வதாகவும் புகாா் வருகிறது.

இந்நிலையில் ஆட்சியா் த.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு: நேரடி நெல் கொள்முதல் மற்றும் உரம் விற்பனை ஆகியவற்றில் புகாா்களைத் தவிா்க்கும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகள், அலுவலா்கள் அடங்கிய இரு கண்காணிப்புப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கும் குழுவில் வேளாண் இணை இயக்குநா், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்டாட்சியா்கள், வேளாண் துணை இயக்குநா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை), வேளாண் உதவி இயக்குநா்கள், விவசாயிகள் பெருமாள் (நெடுங்குளம்), ஏ.அழகுசோ்வை (பனையூா்), எம்.பி.ராமன் (முதலைக்குளம்), த.தா்மராஜ் (கருப்பாயூரணி), வி.ரவி (கொட்டாம்பட்டி), எம்.திருப்பதி (குலமங்கலம்) ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இதேபோல, உரம் விற்பனையைக் கண்காணிக்கும் குழுவில் வேளாண் இணை இயக்குநா், துணை இயக்குநா் (மத்திய திட்டம்), உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), வேளாண் அலுவலா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), வேளாண் உதவி இயக்குநா்கள், விவசாயிகள் கு.தனிக்கொடி (உசிலம்பட்டி), என்.பழனிசாமி (மேலூா்), பி.மணிகண்டன் (செல்லம்பட்டி), எஸ்.சதுரகிரி (பேரையூா்), ஜி.முருகன் (வாடிப்பட்டி), பி.ஜி.ராமன் (திருமங்கலம்) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.