சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தங்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு யாத்ரிகர்கள் நன்றி

தங்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழக முதல்வருக்கு யாத்ரீகர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஜூன் 2013, 9:57 pm

தங்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழக முதல்வருக்கு யாத்ரீகர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அரசின் செய்திக் குறிப்பு:

உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக திரும்பி வர முடியாமல் சிக்கித் தவிப்பது குறித்தும், அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் 20.6.2013 அன்று முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதியின் தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த் துறைச் செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழு உத்தரகண்ட் மாநில தலைமையகமான டேராடூனுக்கு உடனடியாக சென்று அவர்களை மீட்டு தமிழகத்திற்கு விமானம் மூலம் அழைத்து வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 83 யாத்திரிகர்கள் புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு வசதியுடன் தங்க வைக்கப்பட்டதுடன், புது டெல்லியிலிருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் மூலம் இன்று (21.6.2013) மதியம் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை முதல்வர் உத்தரவின்பேரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.

அப்போது, உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற போது இயற்கை இடர்பாட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை எடுத்துக் கூறி, தங்களுக்கு உணவு, தங்குமிடம் அளித்ததோடு விமானம் மூலம் உடனடியாக தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுத்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு யாத்திரிகர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்ட  83 யாத்திரிகர்களுக்கு உணவு வழங்கப்பட்டதுடன், சென்னையைச் சேர்ந்த  67 யாத்திரிகள் 4 சிறப்பு பேருந்துகள் மூலம் அவர்தம் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மீதமுள்ள 16 யாத்திரிகர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு கட்டணமில்லாமல் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.