சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேனை கடத்தி கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3.5 கோடி நகைகள் மீட்பு: 2 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனை கடத்திச் சென்று திங்கள்கிழமை கொள்ளையடிக்கப்பட்ட

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:29 pm

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனை கடத்திச் சென்று திங்கள்கிழமை கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 1,500 பவுன் தங்க நகைகளை போலீஸôர் புதன்கிழமை மீட்டனர். இது தொடர்பாக வேன் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை தேடி வருகின்றனர்.

ஓசூரில் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான நகை வடிவமைப்பு மையம் உள்ளது. இங்கிருந்து அந்நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழகத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனை மையங்களுக்கு விநியோகிக்க ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கடந்த திங்கள்கிழமை சென்றது. வேனை ஓசூரைச் சேர்ந்த தங்கவேலு மகன் சதீஸ்குமார் (23) ஓட்டி வந்தார். மேலும் பாதுகாப்புக்கு முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, நகைகளை விநியோகிக்கும் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள விற்பனை மையங்களில் நகைகளை விநியோகம் செய்த அந்த வாகனம், திங்கள்கிழமை மதியம் சென்னைக்கு புறப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் என்ற கிராமத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக ஊழியர்கள் வேனை நிறுத்திவிட்டு சென்ற போது வேன் கடத்தப்பட்டதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையில் அந்த வேனை கடத்திய மர்ம நபர்கள், ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தில் மரங்கள் அடர்ந்த மறைவான பகுதியில் நிறுத்தி அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

இதனிடையே, ரூ.3.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கத்திடம், பெங்களூரைச் சேர்ந்த விஜயகுமார் புகார் செய்தார்.

இதையடுத்து ஐ.ஜி. மஞ்சுநாதா உத்தரவின்பேரில், டி.ஐ.ஜி., சத்தியமூர்த்தி, எஸ்.பி. விஜயகுமார், ஏ.டி.எஸ்.பி. பாஸ்கர் ஆகியோரது தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட 36 மணி நேரத்தில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளை ஓசூரில் தனிப்படையினர் மீட்டனர்.

மீட்கப்பட்ட தங்க நகைகள் புதன்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. நகைகளை ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

திட்டமிட்டுக் கொள்ளை: இது குறித்து ஐ.ஜி. மஞ்சுநாதா செய்தியாளர்களிடம் கூறியது: நகைக் கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. டிரைவர் சதீஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வாகனத்தில் டிரைவராக பணிபுரிகிறார். இவரது நண்பர்கள் ஓசூர் டேங்க் தெருவைச் சேர்ந்த முருகன் (எ) முருகேசன், அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர்களுடன் இந்த நகைகளை கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். இதற்கு நாகராஜன் மூளையாக செயல்பட்டுள்ளார். கடத்தப்பட்ட வேனின் சாவியை முன்பே திட்டமிட்டு நகல் (கள்ளச்சாவி) எடுத்துள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நகை வேன் எங்கெங்கு செல்கிறது என்பது குறித்து நோட்டமிட்டுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை ஏற்கெனவே பேசி வைத்தது போல ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கத்தில் உணவகம் முன்பு வேனை நிறுத்திய போது, கள்ளச்சாவி போட்டு திறந்து வேனை கடத்திச் சென்று, அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதுதொடர்பாக சதீஸ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் விரைவில் பிடிபடுவர். நகைகளும், அவற்றை கடத்தப் பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் ஐ.ஜி. மஞ்சுநாதா.

அப்போது டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி, எஸ்.பி. விஜயகுமார், ஏ.டி.எஸ்.பி. பாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.