சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்: சல்மான் குர்ஷித் வலியுறுத்தல்

எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 7:00 am

எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு இதுவரை பொறுப்பேற்காத நிலையில், குர்ஷித் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின்,"டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சியில் பங்கேற்ற குர்ஷித் இதுதொடர்பாக மேலும் கூறுகையில், இரு நாடுகளிடையே அமைதி நிலவ இந்தியா ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால், எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்பதற்கான அறிகுறியையே காணவில்லை. அது மட்டுமல்ல, மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் பாகிஸ்தான் இதுவரை பொறுப்பேற்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

ஐ.நா. பொதுசபை கூட்டத்தையொட்டி இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்விக்கு, நேரடியாகப் பதிலளிக்காத குர்ஷித், நமது பிரதமர் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அது நியாயமாக இருக்கும் என்றார்.

எல்லையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் முயற்சியா என்ற கேள்விக்கு, அதற்கான சாத்தியகூறு உள்ளது; ஆனால், அதுவே பாகிஸ்தான் அரசின் பொறுப்பை தட்டிப்பறித்து விடாது என தெரிவித்தார் குர்ஷித்.

எல்லை தாண்டும் விவகாரம் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்த குர்ஷித், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன்தான் நேரடி தொடர்புகொள்ள வேண்டும் என்பது நமது கொள்கை. ஆதலால், இதற்கு பாகிஸ்தான் அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார்.