சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பதவி விலகுவதைத் தவிர பிரதமருக்கு வேறு வழியில்லை: ராஜ்நாத் சிங்

பதவி விலகுவதைத் தவிர பிரதமருக்கு வேறு வழியில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On :12 மே 2013, 9:59 am

பதவி விலகுவதைத் தவிர பிரதமருக்கு வேறு வழியில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது தொடர்பாக தில்லியில் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:÷ஊழல், நிர்வாகச் சீர்கேடு உள்ளிட்ட புகார்கள் எதிரொலியாக ரயில்வே அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சால் ராஜிநாமா செய்துள்ளார்.

இதேபோல, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிபிஐ விசாரணை அறிக்கையை திருத்தியதால், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளான அஸ்வனி குமார், மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நிலக்கரித் துறையில் முறைகேடு நடைபெற்ற காலத்தில் அந்தத் துறையை கவனித்து வந்தது பிரதமர் மன்மோகன் சிங்தான். இந்த விவகாரத்தில் அஸ்வனி குமார் பதவி விலகியுள்ள நிலையில், பிரதமரும் தார்மிக அடிப்படையில் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொருளாதாரம், உள்நாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு உள்பட அனைத்து விவகாரங்களிலும் தோல்வி அடைந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் மக்களவைத் தேர்தலை நடத்துவதுதான் ஒரே மாற்றாக இருக்கும்.

பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையாக தன்னை பற்றி சுய ஆய்வு செய்து கொண்டால், பதவியை விட்டு விலகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

அஸ்வனி குமார் தான் ஒரு அப்பாவி எனக் கூறியுள்ளார். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் யாரை காப்பாற்றுவதற்காக அவர் சிபிஐ விசாரணை அறிக்கையை திருத்தினார். ஏன் அவர் பலிகடா ஆனார். யாருக்காக பதவியை விட்டு விலகினார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆட்சியில் மரபுகள், நீதிநெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கூற வேண்டும்.

மத்திய அரசைக் கண்டித்து வரும் 27-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் பாஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மாவட்ட அளவில் பாஜக தொண்டர்கள் தர்னாவில் ஈடுபடுவார்கள்.

பவன்குமார் பன்சாலும், அஸ்வனி குமாரும் முன்பே பதவி விலகி இருந்தால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடந்திருக்கும். முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) முன் ஆஜராக விருப்பம் தெரிவித்து வருகிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் அனைத்தும் பிரதமருக்குத் தெரிந்தே நடைபெற்றதாக அவர் கூறி வருகிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஜேபிசி முன் ஆஜராக பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை. அவரைப் பாதுகாக்க குழுவின் தலைவர் சாக்கோவும், அதில் இடம்பெற்றுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களும் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்டவை குறித்து முழுமையான விவாதம் நடத்தி, திருத்தங்களை மேற்கொண்ட பின் நிறைவேற்ற வேண்டும்.

வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனப் பயணத்தின் போது லடாக் ஊடுருவல் குறித்து அந்நாட்டிடம் கேள்வி எழுப்பாதது அதிருப்தி தருகிறது.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு தரும் என்றார் ராஜ்நாத் சிங்.