கர்நாடகத்தின் 28-ஆவது முதல்வராக சித்தராமையா திங்கள்கிழமை (மே 13) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பெங்களூர் கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகின்றன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 121 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு, கர்நாடக முதல்வராக அவர் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளார்.
பெங்களூர் கஸ்தூர்பா சாலையிலுள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் திங்கள்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
சித்தராமையாவுக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அன்றைய தினம் சித்தராமையா மட்டும் பதவியேற்கிறார். அமைச்சர்கள் வேறொரு நாளில் பதவியேற்பர்.
பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி, மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்பமொய்லி, ரகுமான்கான், கே.எச்.முனியப்பா, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகள் தீவிரம்: பதவியேற்பு விழா நடைபெறவுள்ள விளையாட்டுத் திடலில் 30 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கை வசதிகள் உள்ளன. பதவியேற்பு விழாவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவியும் வாய்ப்பு இருப்பதால், மேலும் 12 ஆயிரம் இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை கர்நாடக தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் பதவி முள்படுக்கை போன்றது!
பெங்களூர், மே 11: முதல்வர் பதவி முள்படுக்கையைப் போன்றது என்பதை நானறிவேன் என்று கர்நாடக முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூர் குமாராபூங்காவிலுள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை ஆதரவாளர்கள், அதிகாரிகள், தொகுதி மக்கள், முக்கியப் பிரமுகர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
முதல்வர் பதவி சுகமானது அல்ல. அது முள்படுக்கையைப் போன்றது. முதல்வராக நான் எதிர்கொள்ளும் சவால்களை திறமையாக கையாள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
கர்நாடக முதல்வராகப் பதவியேற்றதும் அரசு நிர்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும். அதேபோல, பாரபட்சமற்ற, சமூக நீதியின் அடிப்படையில் அரசு நிர்வாகத்தை செயல்படுத்துவேன்.
அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவுடன் ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவேன். கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
அமைச்சரவையை உருவாக்குவதுகூட எளிதானது அல்ல. கட்சி மேலிடத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை தயாரிப்பேன். இதுதொடர்பாக கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்றார் சித்தராமையா.
பின்னர், கன்னட தேசியகவி ஜி.எஸ்.சிவருத்ரப்பா, ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்கள் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி, சந்திரசேகரகம்பாரா ஆகியோரை தனித்தனியே சந்தித்து, அவர்களது ஆசியை பெற்ற சித்தராமையா, ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

