சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத் தண்டனை குறைப்பு

மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு (53) விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி

Updated On :22 மார்ச் 2013, 8:16 am

மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு (53) விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், சிறைத் தண்டனையை 6லிருந்து 5 ஆண்டாகக் குறைத்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றும் தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. பயிற்சி வழங்கி உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் 10 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜாமீனில் உள்ள சஞ்சய் தத், ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டதால் மீதம் உள்ள மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.

""குற்றத்தின் தன்மை கடுமையானது என்ற காரணத்தால், நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 4 வாரங்களுக்குள் தத் சரண் அடைய வேண்டும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தத்தின் வழக்குரைஞர் சதீஷ் மனேஷிண்டே கூறியது: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாக சஞ்சய் தத் கூறியுள்ளார். தீர்ப்பை படித்துப் பார்த்து, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை ஆலோசித்து முடிவெடுப்பார் என்றார்.

கடந்த 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், கடந்த 2006ஆம் ஆண்டு 100 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில், 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. சட்ட விரோத ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கிலிருந்து 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்களுக்கு உதவியதாகவும், சட்டவிரோதமாக ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசுத் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் பி.எஸ். செüகான் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

10 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு:  இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் யாகுப் அப்துல் ரஸாக் மேமன் என்பருக்கு மட்டும் மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

10 பேரின் தண்டனையை சாகும் வரை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. மேலும் ஒருவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள முக்கியக் குற்றவாளியான டைகர் மேமனின் சகோதரர்தான் ரஸாக் மேமன்.

""குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஸாக் மேமன் முக்கியப் பங்கு வகித்துள்ளார். எனவே, அவரது தண்டனையைக் குறைக்க முடியாது'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தடா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில், அஷ்ரஃபுர் ரஹ்மான் அஸிமுல்லா என்பவரது தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. மீதம் உள்ளவர்களின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கெனவே இறந்து விட்டார்.

இந்த வழக்கிலிருந்து 4 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஏமாற்றமளிக்கிறது: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகளுக்கு தடா நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்ச நீதிமன்றம் அப்படியே உறுதி செய்யும் என நினைத்தேன். ஆனால் பலரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என இதில் பாதிக்கப்பட்ட கிர்தி அஜ்மீரா என்பவர் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் ஆகியும், ரூ.25,000 இழப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கவில்லை. இதுபோல பலருக்கு கிடைக்கவில்லை. இதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.