சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பட்ஜெட்டை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வியாழக்கிழமை

Updated On :22 மார்ச் 2013, 8:26 am

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.

சட்டப் பேரவை கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.

முன்னதாக, பேரவைக்கு 10.27 மணிக்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் வந்தனர். பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய முயன்றார். அப்போது எழுந்த திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கையில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.

அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி ஒலி எழுப்பினர். இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். சில நிமிடங்களில் பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதிமுக அரசின் சார்பில் செய்யப்பட்ட அறிவிப்புக்கான அரசு உத்தரவுகள்தான் ஓராண்டு காலம் முடிகின்ற நேரத்தில் அரசின் செய்திக் குறிப்புகளாக வெளிவந்தன எனவும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான உத்தரவுகளும், அதற்கடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை படிக்கப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டதாக முதல்வரே தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவுள்ள அறிவிப்புகளுக்கான அரசு உத்தரவுகள் அடுத்த ஆண்டு அரசு உத்தரவுகளாக வெளியிடப்பட்டு செய்தித்தாள்களில் செய்தியாக வெளிவரும். அந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வருகிற காலத்தில் இந்த நிதிநிலை குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

எனவே, இப்போது படிக்கப்படுகின்ற நிதிநிலை அறிக்கை என்பது சடங்குக்காக நிதியமைச்சரால் படிக்கப்படுகின்ற ஒன்றுதான். அதிமுக ஆட்சியில் நிதிநிலை அறிக்கை என்பதே, அதில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு அந்தந்த நிதி ஆண்டுக்குள் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு வெளியிட்டு அறிவிப்புகளைச் செயலாக்கத்தின் மூலமாக நிறைவேற்றுதற்காக அல்ல என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரூபணமாகி இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த திமுக எம்.எல்.ஏ.க்கள்.