சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கல்வித்துறையில் சீர்திருத்தம் அவசியம்: பிரணாப்

மார்ச் 21: இந்தியாவில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்று குடியரசுத் தலைவர்

Updated On :22 மார்ச் 2013, 8:22 am

மார்ச் 21: இந்தியாவில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் அமைந்துள்ள ஓபி ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் கருத்தரங்கை வியாழக்கிழமை பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். ''இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் எதிர்காலம்: அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க உயர் கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம்'' - என்ற தலைப்பிலான கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது: சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பது, அதற்குரிய ஆசிரியர்களை நியமிப்பது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது உள்ளிட்ட  பணிகளை பல்கலைக் கழகங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தரமான அதேசமயம் அனைவராலும் ஏற்கக்கூடியதாக மற்றும் எளிதில் கிடைக்கக் கூடியதாக கல்வி இருக்க வேண்டும். இந்த மூன்று முக்கிய விஷயங்களில் பல்கலைக் கழகங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டை முன்னேற்றுவதில் கல்விக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. சமூக ரீதியிலான மாற்றத்துக்கும், பொருளாதார ரீதியிலான உயர்வுக்கும் வழிவகுப்பது கல்விதான். இத்தகைய சூழலில் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசர அவசியமானதாகும்.

மத்திய பல்கலைக் கழகங்களில் 38 சதவீத விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்ற நிலை ஏற்புடையதன்று. இப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். கல்வித்துறையில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதும் ஒன்றாகும்.

ஆசிரியர்கள் இல்லாமல் தரமான கல்வியை அளிப்பது என்பது சாத்தியமல்ல. அதேசமயம் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவேண்டும்.

தனியார் துறை பங்களிப்பு: நாட்டின் பல்வேறு துறைகளில் தனியார் துறையினரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. குறிப்பாக மருத்துவமனைகள், போக்குவரத்து மற்றும் நிதிச் சேவையில் தனியார் துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் கல்வித்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை. தனியார் துறையினர் அதிக அளவில் கல்வித்துறையில் பங்களிப்பை செய்ய வேண்டும். அதேசமயம், தரமான கல்வி அளிப்பதில் எந்த சந்தர்ப்பத்திலும் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது நாடு வளம்பெறும். 2020ஆம் ஆண்டில் இந்தியரின் சராசரி வயது விகிதம் 29 ஆக இருக்கும். ஆனால் அமெரிக்காவில் சராசரி வயது 40 ஆகவும், ஜப்பானில் 46 ஆகவும், ஐரோப்பாவில் 47 ஆகவும் இருக்கும். 2025ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களாக பணிபுரியும் வயதுப் பிரிவினராக இருப்பர்.

இதைக் கருத்தில் கொண்டு உயர் கல்வியோடு தொழில் கல்வியையும் அளிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் உயர் கல்வியின் தேவை அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்தாக வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் உயர் கல்வி பயில்வோரின் விகிதம் குறைவாக உள்ளது. எனவே கிராமப்பகுதிகளில் உள்ளவர்களும் உயர்கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும்.

சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 200 பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட இந்தியாவைச் சேர்ந்ததாக இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும். இந்தநிலை மாற வேண்டும்.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாகும். ஆனால் காப்புரிமை கோரி பதிவு செய்த விண்ணப்பங்களின் அளவு வெறும் 2 சதவீதம் மட்டுமே.

2011ஆம் ஆண்டில் இந்தியாவில் காப்புரிமைக்காக பதிவு செய்த விண்ணப்பங்கள் 42 ஆயிரம். அதே ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவில் தலா 5 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சிக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் மையங்களாகும். தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை பல்கலைக் கழகங்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்றார் பிரணாப்.

ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஒபி ஜிண்டால் சர்வதேச பல்கலைக் கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்க தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் உரையாடும் ஹரியாணா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா. உடன் பல்கலைக்கழக வேந்தரும் எம்.பி.யுமான நவீன் ஜிண்டால்.