சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லியில் உரிமம் இன்றி மின்- ரிக்ஷாக்கள்: பிரதேச அரசு,  மாநகராட்சிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் உரிமம் இல்லாமலும், நம்பர் பிளேட் பொருத்தாமலும் இயக்கப்படும் மின் ரிக்ஷாக்களை தடை செய்ய வேண்டும் என்று

Updated On :12 செப்டம்பர் 2013, 4:29 pm

தில்லியில் உரிமம் இல்லாமலும், நம்பர் பிளேட் பொருத்தாமலும் இயக்கப்படும் மின் ரிக்ஷாக்களை தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கலான பொதுநல மனுவுக்கு பிரதேச அரசும், மாநகராட்சிகளும் பதில் அளிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக சேவகர் ஷாநவாஸ் கான் தாக்கல் செய்த பொதுநல மனு மீது இந்த உத்தவரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

தில்லியில் 650 முதல் 850 வாட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 12 வோல்ட் கொண்ட 4 பேட்டரிகள் பொருத்தப்பட்ட மின் ரிக்ஷாக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரிக்ஷாக்கள் நான்கு பேரை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும், எட்டுக்கும் மேற்பட்டோர் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்த வாகனங்களில் பதிவு எண்களும் இல்லை. நம்பர் பிளேட்டுகளும் பொருத்தப்படவில்லை.

இந்த வாகனங்களுக்கான பொறுப்பை தங்கள் தோள்களில் ஏற்றிக் கொள்ளும் வகையில் போக்குவரத்துத் துறையும், மாநகராட்சிகளும் செயல்படுகின்றன. இந்த வாகனங்களில் மோட்டார் பொருத்தாததால் மோட்டார் வாகனச் சட்டத்தின் வரம்பில் இவை வரவில்லை என்று போக்குவரத்துத் துறையினர் கூறுகின்றனர்.

மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த மின்-ரிக்ஷாக்களில் 2 முதல் 3 பயணிகள் வரை பயணிக்கவும், இவற்றின் பயண வேகம் மணிக்கு 20 முதல் 40 கிலோமீட்டர் அளவுக்குள் இருக்கவும் உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த மின்-ரிக்ஷாக்கள் மூலம் பாதுகாப்புக்கு இடையூறு மட்டுமன்றி, பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களில் அருகே இதுபோன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என். ரமணா, நிதிபதி பிரதீப் நந்திரஜோக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுக்வீர் துபே, "தில்லி சாலைககளில் இயக்கப்படும் மின்-ரிக்ஷாக்களுக்கு நம்பர் பிளேட்டும் இல்லை. தகுதிச் சான்றிதழ், காப்பீடு வசதியும் அளிக்கப்படவில்லை. இதனால், இந்த ரிக்ஷாக்களில் செல்லும் பயணிகளுக்கு ஏதாவது விபத்து நேரிட்டால் காப்பீடுகூட கோர முடியாத நிலை உள்ளது.

ஆகவே, இந்த வகை ரிக்ஷாக்களை இயக்குவதற்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு தில்லி பிரதேச அரசுக்கும், மாநகராட்சிகளுக்கும் உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த மனு மீது தில்லி பிரதேச அரசு, மாநகராட்சிகள், மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதிக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.