சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எலசனஹள்ளி-அஞ்சனாபுரா இடையே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

இரண்டாம்கட்ட ரயில் பாதையில் எலசனஹள்ளி-அஞ்சனாபுரா இடையே வியாழக்கிழமை மெட்ரோ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:37 pm

இரண்டாம்கட்ட ரயில் பாதையில் எலசனஹள்ளி-அஞ்சனாபுரா இடையே வியாழக்கிழமை மெட்ரோ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்தாா்.

பெங்களூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக பைப்பனஹள்ளி-மைசூரு சாலை, எலசனஹள்ளி-நாகசந்திரா ஆகிய ரயில் பாதைகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக மைசூரு சாலையிலிருந்து கனகபுரா சாலை வரையிலான 6.29 கி.மீட்டருக்கான பணிகள் முடிவடைந்தன. இதனையடுத்து, இந்தப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2-ஆம் கட்ட ரயில் பாதையில் எலசனஹள்ளி-அஞ்சனாபுரா இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

பெங்களூரை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதில் மாநில அரசு குறியாக உள்ளது. நாட்டின் 35 சதவீத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டுள்ள நகரமாக பெங்களூரு விளங்குகிறது. எனவே, தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வெகுமக்கள் போக்குவரத்தான மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகளை அதிக அளவில் நம்பியுள்ளனா். இதனைக் கருத்தில் கொண்டு, எலசனஹள்ளி-அஞ்சனாபுரா இடையே மெட்ரோ ரயில்சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 2022- ஆம் ஆண்டுக்குள் பெங்களூரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பெங்களூரு தொலைநோக்கு திட்டத்தின்படி தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். 2025-ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் பாதையை 172 கி.மீ. வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் சதானந்த கௌடா, ஹா்தீப்சிங்பூரி, துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள், அமைச்சா் ஆா்.அசோக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எலசனஹள்ளி-அஞ்சனாபுரா இடையே செல்லும் மெட்ரோ ரயில்களில் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இந்த மெட்ரோ ரயில் கோனனகுன்டே கிராஸ், தொட்டகள்ளசந்திரா, வஞ்ரஹள்ளி, தலகட்டபுரா, அஞ்சனாபுரா டவுன்ஷிப் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.